பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? பெற்றோர், ஆசிரியர்கள் கூறுவது என்ன? | parants and teachers suggestion about schools open | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து ஆந்திராவில் கடந்த 2ஆம் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதில் 3 தினங்களில் மட்டும் 575 மாணவர்களுக்கும், 829 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நோய் தொற்று பரவும் காலத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 12,000 பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி இன்று மாலையே அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ரேமண்ட் பேட்ரிக் கூறுகையில் ” பல இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழல் நிலவுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் பள்ளிகளைத் திறப்பதால் மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். வயதில் மூத்த பல்வேறு நோய் தொற்றுடைய ஆசிரியர்கள் மூலம் சமூக தொற்றாக பரவ வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவர் பெற்றோர் கூட்டமைப்பின் இளைய பெருமாள் கூறுகையில் “நோய் தொற்று பரவிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் மாணவர்களை வைத்து நாம் சோதனை செய்யக் கூடாது. பள்ளிக்கு அனுப்புங்கள், நோய்தொற்று நின்றுவிட்டது, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சொல்லுங்கள். அதற்கான ஏற்பாடுகளுடன் பள்ளிகளைத் தொடங்குவது தான் சரியாக இருக்கும். தீபாவளி பொங்கல் விழாக்கள் எல்லாம் முடிந்த பிறகு நோய் தொற்று ஏற்படாது என தீர்மானித்த பிறகு பள்ளிகளை தொடங்க வேண்டும். பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும்.” என தெரிவித்தார்.