அன்று என்னதான் செய்தார் எம்.ஜி.ஆர்..? – இன்று கட்சிகள் ‘பங்கு’ போட துடிப்பதன் பின்புலம்! | Why do political parties use the name MGR | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
‘மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டு வருவோம்’ – தமிழகத்தில் யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் முதலில் அவர்கள் எடுக்கும் தாரக மந்திரம் இதுவாகவே சமீப காலமாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் தற்போது கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினிகாந்த் வரையில் எம்.ஜி.ஆரை மையப்படுத்தியே அரசியலை நகர்த்துகின்றனர். இதில், அதிகம் மைய்யப்படுத்துவது கமல்.
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம், ஆண்டுகள் கடந்தாலும் அரசியலில் அனைவரையும் பேச வைத்துள்ளது. சின்னம் என்றால் இரட்டை இலை; தலைவன் என்றால் எம்ஜிஆர் என கடைகோடி கிராமத்து மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்தவர்தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1977 – 1987 வரை தமிழகத்தை தன்னுள் வைத்து ஆட்டிபடைத்த அந்த மூன்று எழுத்துதான் ‘எம்.ஜி.ஆர்’.
இவர்தான் எம்.ஜி.ஆர்:
தன்னுடைய உதவும் குணத்தாலும் நலத்திட்ட உதவிகளாலும் மக்களை திணற வைத்த எம்.ஜி.ஆர், ‘புரட்சித்தலைவர்’, ‘மக்கள் திலகம்’, ‘பொன்மனச் செம்மல்’ என மக்கள் கொடுத்த பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். சினிமாவில் தொடங்கி அரசியல் வரை அனைத்து காலகட்டங்களும் மக்களுக்கு நல்லதை சொல்வதும் செய்வதுமாகவே திகழ்ந்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து கோலோச்ச முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் எம்ஜிஆர். திரைப்படங்கள் மூலம் பெரியார் அண்ணாவின் சமூக கருத்துகளை மக்களிடம் விதைத்து, அதை கடைசி வரை கடைப்பிடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் எம்ஜிஆர்.
விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், குழந்தைகளுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடநூல் வழங்குதல், ஊனமுற்றோர்களுக்கு உதவி, முதியவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை, மதிய சத்துணவு, ஆண்டுக்கு இருமுறை சீருடை வழங்குதல், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தனது ஆட்சியில் நிகழ்த்தி காட்டினார் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கொள்கையால் அரசியலில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் அண்ணாவை தலைராகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்றார். இதை திமுகவில் இருந்துகொண்டே எம்.ஜி.ஆர் வெளிப்படையாக கூறியுள்ளார். அத்தோடு தான் ஆட்சியில் இருந்தபோது காமராசரின் மதிய உணவு திட்டத்தினை திறம்பட சத்துணவு திட்டமாக செயல்படுத்தினார்.
தி.மு.க.வின் தலைவரான அண்ணா, எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். தேர்தல் பிரசாரத்தில் அதிக பங்கு வகித்தமையால் அண்ணா எம்.ஜி.ஆருக்கு இதயக்கனி எனும் பட்டம் கொடுத்தார்.
திமுகவில் என்னதான் பிரச்னை… அதிமுக உதயமானது எப்படி?
அண்ணா மறைவையடுத்து தன்னை முதல்வர் அரியணையில் அமர வைக்க பாடுபட்ட எம்.ஜி.ஆரையே ‘அண்ணா கொடுத்துவிட்டு சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. கனியை தூக்கி எறிய வெண்டியதாயிற்று’ ஓரங்கட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கு காரணம் திமுகவிலேயே பொருளாளராக இருந்துகொண்டு “அந்த கட்சியினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும். தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று பொதுக்கூட்டங்களில் பேசினார் எம்.ஜி.ஆர்.
திமுகவில் இருந்து தூக்கியெறியப்பட்ட எம்.ஜி.ஆர் 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். அந்தப் பெயரே அண்ணாவை எத்தனை தூரம் எம்.ஜி.ஆர் நேசித்தார் என்று காட்டியது. 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார்.
ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்:
எம்.ஜி.ஆர் உயிரிழந்துவிட்டார் என்று சொன்னால் கூட அதை நம்பாத வெறித்தனமான பக்தர்கள் அவருக்கு இருந்தனர். அதற்கு காரணம் முதல்வராக இருந்துகொண்டு ஒரு சாமானியனின் தோல்மீது கைப்போட்டு பேசுவார் எம்.ஜி.ஆர். காரில் செல்லும்போது விவசாயிகளை கண்டால் கீழே இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு செல்வார். ஏழைகளோடு தரையில் அமர்ந்து உணவு சாப்பிடுவார். வயதானவரகளை கட்டியணைத்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார்.
இவையனைத்தும் எம்.ஜி.ஆரின் முகங்களே. இதனால்தான் தமிழக அரசியலில் இருந்து எம்.ஜி.ஆரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் புறந்தள்ளிவிட முடியவில்லை என்று நினைவுகூரும் மூத்த அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள், ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து ஆட்சியமைத்து கோலோச்ச முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அழுத்தமாகக் கூறுவர்.
தன்னுடைய ஆட்சி காலத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி காலகட்டம் வரை எம்.ஜி.ஆரை முன்வைத்தே தனது அரசியலை நகர்த்தி சென்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் உதிர்த்த அதிகபட்சமான வார்த்தை ‘எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க’ என்பதாகவே இருந்தது. இது ஒருபுறமிருக்க தமிழக அரசியல் மேடைகளில் அதிமுக அல்லாத கட்சிகளும் எம்ஜிஆரை முன்வைத்தும், அவரது ஆட்சியையும் பாராட்டியும் பேசி வருகின்றன.
தமிழக அரசியலில் புதிதாக கால் ஊன்றும் எந்த கட்சி மற்றும் தலைவராக இருந்தாலும், எம்ஜிஆரை தவிர்த்து, அரசியல் இல்லை என்பதை தான் சமீபத்திய பல கட்சிகளின் தலைவர்களது கருத்துகள் நமக்கு உணர்த்தியுள்ளது.
‘கருப்பு எம்.ஜி.ஆர்’ – விஜயகாந்த்
தமிழகத்தின் இரண்டு ஆளுமைகளாக இருந்த மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் எதிர்த்து அரசியலில் களம் கண்ட விஜயகாந்த், ‘மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவேதான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்கிறார்கள்’ என கர்ஜித்தார். மேலும், அவரைப்போல நம்பகமான தலைவனாக வருவேன் எனவும் தெரிவித்தார்.
‘எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன்’ – ரஜினி
இதையடுத்து பல யோசனைகளுக்கு பிறகு இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என சூளுரைத்த ரஜினிகாந்தும் எம்.ஜி.ஆர் என்ற மந்திரத்தையே பயன்படுத்தினார். “அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வ பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும்” என்றார்.
‘எம்.ஜி.ஆர் போல் மோடி – பாஜக’
இதுபோதாது என்று எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திரம் பாஜகவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த மாதம் பாஜக நடத்திய வேல்யாத்திரையின் போது வெளியிட்ட வீடியோவில், எம்ஜிஆர் ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என பிரசாரம் செய்தது. மேலும், தமிழகத்தில் முதல்வராக எம்ஜிஆர் இருந்த போது நலத்திட்டங்களை செயல்படுத்தியது போல பிரதமர் மோடியும் செயல்படுகிறார் என பாஜகவினர் பெருமிதம் பேசி வருகின்றனர்.
‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ – கமல்
அந்த வழியில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் இணைந்துள்ளார். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார் கமல். பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன், எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து என குறிப்பிட்டார். அதிமுக இன்றும் ஆட்சியில் உள்ள நிலையில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவதற்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன் “அதிமுகவுக்கு நீட்சி என்று நான் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு நீட்சி என்றுதான் கூறினேன். எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது அவரை திமுகவின் திலகம் என்று கூறவில்லை. அதிமுகவை தொடங்கிய போதும் அவரை அதிமுகவின் திலகம் என்று கூறவில்லை. அவர் எப்போது மக்கள் திலகமாகவே இருந்தார். அதன்படி நான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இன்று இருக்கும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆரின் மதிமுகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அவர் மடியில் அமர்ந்திருக்கிறேன். நான் சின்ன வெற்றி பெற்றால் கூட என் நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு பாராட்டுவார் எம்.ஜி.ஆர்.” என்றார்.
இந்நிலையில், மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் வருமா? அல்லது எம்.ஜி.ஆரின் வாக்குகளை சேகரிப்பதற்கான திட்டமா? அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி எடுக்கும் அரசியல் நிலைப்பாடு தமிழகத்தில் எடுபடுமா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.
திமுக எதிர்ப்பே எம்.ஜி.ஆர் அரசியல்:
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் மாலன் கூறுகையில், “எம்.ஜி.ஆரை இரண்டாக பிரித்து பார்க்க வேண்டும். ஒன்று அவரது கட்சி. மற்றொன்று அவரது ஆட்சி. அடித்தளமக்கள் பயன்படக்கூடியதாக அவருடைய ஆட்சி இருந்தது. எம்.ஜி.ஆர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. கட்சியை பொருத்தவரை திமுகதான் எதிரி என தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் தற்போது வருபவர்கள் கருத்தியல் ரீதியாக முன்வைத்து பேசுகிறார்கள். நேர்மை, ஊழல் என்று பேசுகிறார்கள். அது மக்களுக்கு புரியாது. அதை உருவகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் யாரும் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவது வீண்.” என்றார்.
எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை:
இதுகுறித்து பத்திரிகையாளர் கணபதி கூறுகையில் “எம்.ஜி.ஆர் மிகப்பெரிய தலைவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த பெயரை உபயோகப்படுத்துவது தவறு இல்லை. ஆனால் எந்த இடத்தில் உபயோகப்படுத்தக்கூடாது என்பதில் தான் பிரச்னை. ஜெயலலிதா இருந்தபோது கூட எம்.ஜி.ஆர் பெயரில் மற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பதாலேயோ, பெயரை உபயோகப்படுத்துவதனாலேயோ கோபப்படவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரை பற்றி தவறாக சித்தரிக்கும்போது ஜெயலலிதா கோபப்பட்டார்.
இப்போது ஏன் எம்.ஜி.ஆர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள் என்றால், எம்.ஜிஆரின் விசுவாசிகள் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. திமுகவுக்கு பலம் உள்ளது. ஆனால் அதிமுகவில் பலம் குன்றியுள்ளது. அந்த வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டுகின்றனர். அதிமுகவில் இருப்பவர்கள் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை புதிதாக வருபவர்களுக்கு உண்டு. அதனால்தான் அமைச்சர்கள் பயப்படுகிறார்கள்” என்றார்.